00:54 | Author: அன்னைபூமி
அழகழகாய் வண்ண வண்ண புட்டிகளில் அடைபட்டிருக்கும் இவைகள் பலரின் கவலைகளையும், மனக்குமுறல்களையும், பலதரப்பட்ட நினைவலைகளில் இருந்தும் அவர்களை நிலைமறக்கச்செய்யும் இனிமையான அழகிகள். சில இனிப்பான நேரங்களின் போதும் ரசமேற்றிக்கொடுப்பதும் இதுதான். மது மனிதர்கள் கவலை மறக்கவும் சந்தோசமாய் இருக்கவும் பயன்படுகின்றது என்றால் அது உன்மைய்யா? இதற்கு ஆம் என்றே பதில் சொல்லியே ஆகவேண்டும்.
                         இன்றைய சூழலும் தொடர்பும் அப்படி மனிதர்களை மாற்றிவிட்டது, என்றல் அது உன்மைதான். கிராமங்களில் நூலகம் இருக்கின்றதோ இல்லையோ கண்டிப்பாக மதுக்கடைகள் காணப்படுகின்றன. கிராமங்களிலேயே இந்த நிலை என்றல் நகரங்களைச் சொல்லவா வேண்டும். ஆம் சொல்லித்தான் ஆகவேண்டும். வசதி படைத்தவர்கள் சென்று மகிழயென குளிரூட்டப்பட்ட மதுக்கடைகள், ஒளி மங்கிய விளக்குகள் என மரணத்தை வரவேற்கும் மயாணங்கள் பல.
                        மனிதனின் சோகம், மகிழ்ச்சி, என்பதை தாண்டி திருவிழாக்கள், திருமணங்கள், இறுதி ஊர்வலம் என அத்தனைகளிலும் தனது முத்திரையை பதித்துவிட்டது இந்த மது. இதற்கு யார் காரணம்?
                       சற்று காலத்திற்கு முன்னர் அன்றைய நாட்களில் மதுக்கடைகளின் எண்ணிக்கை மிககுறைவு, வயதில் மூத்தவர்களும் உடல் வருந்தி உழைப்பவர்களும் மட்டுமே செல்லும் பழக்கம் இருந்தது. இளைஞ்கர்கள் மூத்தவர்களின் வார்த்தைக்கு பயந்து நடத்தையில் ஒழுக்கத்தை பின் பற்றினர். அவர்களின் சிந்தனையும் அன்றைய சூழலும் வேறு.
                       திருவிழாக்களும், திருமணநிகழ்வுகளும், விளையாட்டுகளும் அதன் சடங்குமுறைகளும் அன்றைய மனிதர்களின் வாழ்க்கை முறையை சந்தோசமாகவும், சீறிய நெறிமுறையோடும் வழிநடத்தியது என்றால் அது மிகையில்லை.
                       இன்றைய சூழ்நிலையில் எல்லாவற்றிர்க்கும் ஆரம்பமும் முடிவுமாக மதுக்கடை இருக்கின்றது. ஆம் கல்லூரியில் சேர்ந்ததில் தொடங்கி முதல் மதிப்பெண், புது வண்டி, முதல் காதல், காதல் தோல்வி, திருமணம், முதல் குழந்தை என பட்டியல் நீண்டு கொண்டே செல்கின்றது.
                      படித்தவர்கள் முதல் பாமரர் வரை மது ஊடுருவியதற்கு யார் காரணம். எண்ணில் அடங்கா மதுக்கடைகளா? இது தவறில்லையென  மாற்றிவிட்ட சமூகமா? தனி மனித ஒழுக்கத்தை கை உதரிவிட்ட நல்ல உள்ளங்களா? இல்லை வழினடத்த வேண்டிய ஆசானா, அரசனா? யாரைச்சொல்ல.
                      தவறுகள் பழகிப்போனதால் சரியென்று ஆனது. பல குடும்பங்களின் வழ்வும் பறிபோனது. பழகிய காரணத்தால் கைவிட முடியாத விஷ்வாசியாகிவிட்டது மதுவும்.
                         தன்னிலை தவறுதலில் காரணமாகவே சமூகத்தில் தவறுகல் நிகழ்கின்றன. எனவே எந்த பிரச்சனைக்கும் யாரையும் குறை சொல்லி ஒன்றும் ஆகப்போவதில்லை. தனி மனித ஒழுக்கமே சமூக மாற்றத்திற்கு வழிவகை செய்யும். சுய ஒழுக்கமே இன்றைய சமூகத்தை மாற்றும்.
                    எது வாழ்க்கைக்குத்தேவை என்பதை நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள், யாருக்காகவும் தவறுசெய்வதற்காக இனங்கிப் போகாதீர்கள். நன்றி. . . .!!!!!!!!!!   
05:30 | Author: அன்னைபூமி
தினமும் பன்னிரண்டு
மணிநேரம் தவமிருக்கின்றது
சூரியன். . .
அதிகாலையில் உன்
கண்விழிப்பிற்காக. . .

தினமும் தேய்கின்றது
நிலா. . .
இரவில் உன்னைப்
பார்க்கமுடியாமல். . .

இரவில் ஒருநாள்
உன்னை
வீதியில் கண்டது
நிலா. . .
அன்றுதான் பௌர்ணமி. . .

இரவுகளில் உன்னை
காணமுடியாமல்
இறுதியில் கருகிவிட்டது
நிலா. . .
அன்றுதான் அம்மாவாசை. . .
05:30 | Author: அன்னைபூமி
            ஒரு சிறிய கதை - கேள்விபட்டிருக்கலாம், இருந்தாலும்... ஒருவன் தவளையை நிற்க வைப்பது பற்றி ஆராய்ச்சி செய்த கதைதான். முதலில் தவளையின் ஒரு காலை வெட்டிவிட்டு "நில்" என்றானாம். மூன்று கால்களில் தவளை நின்றது. பிறகு இரண்டாவது காலையும் இழந்து " நில் " கேட்டு மீதி இரு கால்களில் நின்றது. அப்படியே மூன்றாவது காலையும் இழந்து ஒரு காலில் நின்றது. நான்காவது காலும் போனபின் நிற்க இயலாமல் தவளை அப்படியே கிடக்க , ஆராய்ச்சியின் முடிவை எழுதினான். நான்கு கால்களையும் வெட்டிவிட்டால் தவளைக்கு காது கேட்பதில்லை என்று.

         இது கொஞ்சம் பழைய விசயம்.   இதற்காக  
ஒரு    பக்கத்தை ஒதுக்கி  பதிவு செய்யவேண்டியிருக்கிறது. டார்வினின் கோட்பாட்டின்படி மரத்தில் தொங்கிக்கொண்டிருந்த நாம் நிமிர்ந்து மனிதனாய் நடக்க ஆரம்பித்ததே ஆராச்சியின் விளைவுதான். நம்முடைய ஐந்து புலன்களும் தெரிவிக்கின்ற சேதியை   அப்படியே எடுத்துக்கொள்ளாமல் அதில் மறைந்துள்ள அர்த்தத்தையும் கண்டுணர வேண்டும். பழந்தமிழகத்தில் முன்பிருந்து மூத்தகுடியினர் இதில் தேர்ச்சி பெற்றிருந்ததால்தான் அரிய விசயங்கள் ஓலைச்சுவடிகளாக கிடைத்தன. போகர், அகத்தியர்,  புலிபாணி போன்றவர்களின் பதிவுகள் இதனை பெரிதும் நிருப்பிக்கின்றன. அந்த திறமை தொப்புள் கொடி அன்பளிப்பாக வழிவழியே வந்தாலும் கொஞ்சம் கொஞ்சமாக தொலைத்து விட்டது போல தோன்றுகிறது.

               கல்விமுறையின் கற்பித்தலின் முறைமாறி புரிந்து படிக்காமல் மனப்பாடம் செய்வது, எப்பொருள் யார் வாய் கேட்பினும் மெய்ப்பொருள் காணாமல் ஒப்பிப்பது
போன்றவை யோசிக்கும் ஆற்றலையே சிதைத்து விடுகின்றன. வாழ்க்கையிலும்    இதே கடைபிடிக்கப்படுகிறது. பெற்றோரோ ஆசிரியரோ கண்டித்தால், அவர்கள்  முற்றிலுமாக வெறுத்து விட்டதாகக்     கருதி தற்கொலை முயற்சி   மேற்கொள்வது  போன்ற மடமை உள்ளது. சமீபத்தில் காதலி இரண்டு நாட்களாக அலைப்பேசியில் பேசவில்லை என்று இளைஞன் ஒருவன் தற்கொலை செய்துகொண்டான். ஒரு செயலோ சொல்லோ அதன் உட்கருத்தினை புரிந்துகொள்ளவேண்டும். இது போன்று ஆராய முற்படும்போது பதிவின் ஆரம்பத்தில் சொன்ன கதையை போல அன்றி உண்மை பொருளை கண்டு கருத்தில் கொள்ள வேண்டும். மகாகவி சொன்ன   "நுனியளவு செல்" என்பதன் இன்றைய பொருளும் இதுதான்.
 

19:05 | Author: அன்னைபூமி
விவசாயிகள்.....!!!!!!!

மண்ணைப் பார்த்த நாள்முதல்
உண்ண உணவில்லை இன்றுவரை. . .
உயிர் சிந்தி - உழைத்து உழைத்தே
கைகளின் உள்ளங்கை கூட
கருப்புத்தோல் போர்த்தியிருந்தது. . .

பசியறியா காலம்போய்
வாழ வழிகேட்கும்
வயிற்றுக்கு - இன்றோ
பதில்கூற முடியாத
ஊமைகளாய் இவர்கள். . .

கண்ணீரால் நனைந்து
இவர்களின் இதயங்கூட
இன்று ஊறிப்போன நிலமைதான். . .

நெஞ்சுக் கூட்டின் ஆழமும்
கொஞ்சம் அதிகப்படுத்தப்பட்டுதான் இருந்தது. . .

பசிசெய்த கொலையால்
அந்த ஆழங்கூட - இவர்களின்
ஆவி புதைக்கும் பிணப்படுகுழியாய்த்தான். . .

மழைதந்த வறட்சியால்
இவற்களின் ம்ண்ணும்
இன்று வாய்பிளந்து
உயிர் விட்டுக்கொண்டிருப்பதுதான்
இன்னும் கொடுமை. . .

இது தொடர்ந்தால்
இவர்கள் அணைவரும்
பிணமாவது சத்தியம். . .

இவர்கள் பிணங்கண்டு மனமுருகி
பணந்திண்ணும் முதலைகளும்
மண்வாசனை மறந்து மாக்களும்
இரக்கங்கொண்டு எரித்துத் தொலைவோம்
எனப் பிணங்களைத் தீயிட்டு
எரிப்பதும் நிச்சயம். . .

எரித்த சாம்பலைக் கரைக்கத்
தண்ணீர் வேண்டுமே....?
அப்பொழுதாவது
மழை வரும்......!!!!!

05:18 | Author: Ravi
                               
நம்மை நாமே வடிவமைத்துக் கொண்டோம்
பலவேறு வடிவமாக சிதறியிருந்தோம்
ஒரே பெயரில் ஒன்று சேர்ந்தோம் - இந்தியா
பிரிக்கப்பட்ட பல கோடுகளாய் இருந்தோம்
யாரோ தீண்டிவிட அழித்து எழுதப்பட்டது
ஆரம்பமும் முடிவுமான எல்லை கோடானோம்
ஆட்சி முறையின் சதுரங்கத்தில்
தோல்வி எதிர்பார்த்து கேலியாய்
காத்துக்கிடந்த அத்தனை பேருக்கும்
கரித்தூள் பூசி பதில் தந்தோம்
சின்னக் குழந்தையின் கிறுக்கலாக இல்லாமல்
தலைவிதியை தெளிவாக்கினோம்
நம்மை நாமே நிர்ணயித்தோம்
இன்றும் மூன்று கடல் சூழ
நான்கு புறமும் எதிர்ப்பு நிற்குது
என் பாரதத்திற்காக இன்னுயிர் தந்த
அத்தனை பெயர்களையும் நினைவுறுத்தி
சிந்தப்பட்ட குருதியில் எம் மூச்சாக
இனவாதம் மதவாதம் பலியிட்டு
இம்மண்ணை மதித்து இந்தியனாவோம்



06:00 | Author: Ravi

          ஈதல் இசைபட வாழ்தல் தமிழர் பண்பாடு . உண்மைதான் அலைபேசியில் அழைக்கப்படுவதற்கும் அழைப்பதற்கும் இசைதான்- சந்தர்ப்பம் தெரியாமல் தேசிய கீதமும், திருப்பள்ளி எழுச்சியும் அழைத்து நம்மை திருதிரு திருவாளர் ஆக்கிவிடும். ஆனால் பணம் கரைவது மனதிற்குள் வசைதான். வாகனம்கூட முன்னேயோ பின்னேயோ இசைத்து போகிறது. சமயத்தில் போக்குவரத்து நெரிசலில் சிக்கிக் கொண்டால் வாகனங்களின் நராசமான கூவல் காதை குடையும் இசைதான்..... இதே கூவல்தான் தொலைகாட்சியிலும்   வானொலியிலும், அவ்வப்போது தொகுப்பாளரின் விருப்பமாக நேயர்களின் வசன இசைகளும் - "நீங்க ரொம்ப நல்லா பாடறீங்க". ஒரொரு சமயத்தில் மின் தடை ஏற்பட்டுள்ளபோது மட்டும் ஏற்படும் அமைதி மட்டும் மனதிற்கு உகந்த மெல்லிசை. 

            மற்றபடி தலைப்பின் உண்மையான தகவல் என்னவென்றால், பிறருக்கு தர்மம் செய்து நல்ல பெயருடன் மற்றவர் போற்ற வாழ்வதுதான் இசைபட வாழ்தல் என்று தமிழாசிரியர் சொன்னார். எளியோரின் துயர் தீர்ந்த மனம் பாடும் வாழ்த்துதான் உண்மையான இசை. பாலும் தேனும் ஓடிய காலத்தின் தமிழர் பண்பாடு என்று கேலி பேசாமல், முடிந்தவரை மற்றவறுக்கு உதவி செய்து தமிழனாக வாழப்பார்ப்போம்.... நெஞ்சுரம், நேர்மை திறம், புறமுதுகிடா வீரம், வாக்கு தவறாமை... என திருக்குறள், புறநானூறு போன்றவை போட்டி போட்டு தரும் பட்டியலில் இது மட்டுமே தமிழர் பண்பாட்டிலேயே மிக எளிதாக பின்பற்றக்கூடியது . 
23:14 | Author: அன்னைபூமி
கூத்துக்கலையில் வீழ்ந்து ஆடும் ஆட்டங்கள்

துடி
       கடலின் நடுவே ஒளித்த சூரபதுமனை வென்ற பிறகு அக்கடலையே அரங்கமாகக் கொண்டு துடி கொட்டியாடிய கூத்துத் துடி என்ப்படும்.

கடையம்
        வாண்னுடைய சோ என்னும் நகரத்தின் வடக்குப் புறத்தில் இருந்த வயலில், இந்திரனுடைய மனைவி அயிரானி உழத்தி உருவத்தோடு ஆடிய உழத்திக்கூத்து கடையக்கூத்து எனப்படும். இதற்கு உறுபுகள் ஆறு.

பேடு
       மன்மதன் தன் மகனான அநிருத்தனைச் சிறை மீட்பதற்காக வாணனுடைய சோ என்னும் நகரில் பேடி உருவம் கொண்டு ஆடிய ஆடல் பேடு எனப்படும். இது நான்கு உறுப்புக்களை உடையது.

மரக்கால்
       கொற்றவை முன் நேராக எதிர்த்துப் போர் செய்ய முடியாத அவுணர், வஞ்சனையால் வெல்லக்கருதிப் பாம்பு, தேள் முதலிய ஏவிவிட, அவற்றைக் கொற்றவை மரக்காலினால் உழுக்கி ஆடிய ஆடல் இது. இதற்கு நான்கு உறுப்புகள் உண்டு.

பாவை
       அவுணர்கள் மோகித்து வீழ்ந்து இறக்கும் படி ஆடிய கூத்து இது, இப்பாவைக் கூத்து மூன்று உறுப்புக்களையுடையது.

இப்பதினொரு வகை ஆடலையும் 1800 ஆண்டுகளுக்கு முன்னர் மாதவி ஆடினாள் என்று சிலப்பதிகாரம் சொல்லுகின்றது.
இந்தப் பதிப்புடன் கூத்த்துக்கலை முடிவு பெற்றது.
00:13 | Author: அன்னைபூமி

எங்கும் தனியார்மயம் என்று இருக்கும் இன்றைய சுழ்நிலையில் ஒரு இளைஞன் நல்ல வேலைக்கு செல்ல வேண்டுமானால் கல்விதகுதியையும் தாண்டிய சில சிறப்பு தகுதிகள் தேவைப்படுகிறது. அவை மென்திறன் என்று சொல்லப்படும் கூடுதல் திறமைகளே ஆகும். கடிண உழைப்புக்கு பெயர் பெற்ற நம்மவர்க்கு கீழே சொல்லப்படும் மென்திறன்களை   பெறுவது சுலபமானதே......


இதோ அந்த மென்திறன்களை வரிசைபடுத்திகிறேன்.....

கணிணி பற்றிய அடிப்படை அறிவு.
கணிதத்திறன்.
வெற்றியின் அடிப்படையான தன்னம்பிக்கை.
எதிராளி கண் பார்த்து பேசுதல்.
உற்சாகமும் சுறுசுறுப்பும் அவசியம்.
நேரம் தவறாமை.
எழுத்துத்திறன்.
சுயதோற்றம் முக்கியமான ஒன்று.
பணிவு, நேர்மை, உன்மை.
அங்கிலத்தில் பேசுவது.
தொழிற்சார்ந்த பயிற்சிகள்.
கற்றுக்கொள்ளும் தாகம்.
எடுத்துக்கொண்ட வேலையை திறம்படச்செய்து முடித்தல்.
அணியுடன் சேர்ந்து செயல்படுவது.
வங்கி சீட்டு நிரப்புதல் , ரயில்வே முன்பதிவு சீட்டு எடுத்தல், இமெயில் அனுப்புதல் போன்றவற்றை தெரிந்திருத்தல் அவசியம்.
22:16 | Author: அன்னைபூமி
நின்று ஆடும் கூத்துக்கலையில் இறுதி மூன்று வகை

குடக்கூத்து
                    கண்ணனுடைய பேரனாகிய அநிருத்தனை வாணன் என்னும் அவுணன் சிறை வைத்தபோது, அவனை சிறை மீட்பதற்காகக் கண்ணன் ஆடிய ஆடல், மண்ணால் அல்லது பஞ்ச லோகத்தினால் செய்யப்பட்ட குடத்தைக் கொண்டு ஆடப்படுவது இக்கூத்து, குடக்கூத்துக்கு ஐந்து உறுப்புகள் உண்டு.

பாண்டரங்கம்
                           சிவபெருமான், திரிபுரத்தை எரித்துச் சாம்பலாக்கிய பின்னர், தேர்ப்பாகனாக இருந்த நான்முகன் காணும்படி ஆடியது இக்கூத்து இக்கூத்தில் தூக்கு என்னும் தாள உறுப்புச் சிறப்பாக இருக்கும். இக்கூத்து மொத்தம் ஆறு உறுப்புக்களை உடையது.

மல்
         கண்ணன், வாணன் என்னும் அவுணனுடன் மற்போர் செய்து அவனைக் கொன்றதைக் காட்டும் கூத்து மல்லாடல் எனப்படும். மல்லாடல் ஐந்து உறுப்புக்களை உடையது

நின்று ஆடும் கலை நிறைவுபெற்றது. இனி வீழ்ந்து ஆடுவது தொடரும். . .
Category: | Leave a comment
13:01 | Author: அன்னைபூமி
கற்கால முடிவில் தோன்றிய புதிய கற்காலம் விவசாயத்திற்கு வித்திட்டது. உழவு, குழும வாழ்க்கையென தோன்றி நாடோடி வாழ்க்கை முடிவுக்கு வந்தது. விவசாயம் தலைத்தோங்கியது நாகரீகம் தோன்றியது. அது தான் பொற்காலம். அன்று ஆக்க சக்தியாக, ஒளியும், நெருப்பும், சக்கரமும் இந்த உலகத்தை ஆண்ட காலம் அது. மக்கள் மிகவும் சந்தோசமாக இயற்கையுடன் இயைந்த வாழ்வை வாழ்ந்தனர் என்றால் அது மிகையில்லை. இன்று 21ஆம் நூற்றாண்டு விண்ணைத்தொடும் கட்டிடங்களும், வண்ண விலக்குகளும், கணினிகளும் கால் பதித்து நடனம் ஆடிக்கொண்டிருக்கின்றன. இன்று நம் பூமித்தாயின் இதயத்தை இயந்திரங்கள் தூர்வாரிக்கொண்டிருக்கின்றன. நாடோடி வழ்க்கை மறுபடியும் தொடங்கிவிட்டது, மக்கள் இடம் பெயர தொடங்கிவிட்டனர். பண்பாட்டின் பழம்பெறும் பகுப்புகள் மக்கள் மனதில் மெல்ல கரையத்தொடங்கி மறையும் நிலைக்கு வந்துவிட்டது. அன்று வாழ்ந்த அனைவரும் விவசாயிகள். இன்று சிலர் கோடிகளில், நம்மில் பலர் தெருக்கோடிகளில். ஏற்றத்தாழ்வு வந்ததற்கு விவசாயம் மறக்கடிக்கப் பட்டதே காரணம்.
                        
                     "சுழன்றும்ஏர்ப் பின்னது உலகம் அதனால்
                      உழந்தும் உழவே தலை"

மக்கள் பிற தொழில்களைச் சுழன்று சுழன்று செய்தாலும்,  அவையெல்லாம் உழவுத் தொழிலுக்குப் பிற்பட்டனவே; ஆகவே, துன்பங்கள் நிரைந்தாலும் உழவுத்தொழிலே தலை சிறந்த தொழிலாகும்.

               "உழவார் உலகத்தார்க்கு ஆணி அஃதுஆற்றாது
                எழுவாரை எல்லாம் பொறுத்து" 

பிற தொழில் செய்வாரை எல்லாம் தாங்குபவர்கள் உழவர்களே; ஆகவே, உலகம் என்னும் தேருக்கு உழவர்களே அச்சாணி போன்றவர்கள்.

00:10 | Author: அன்னைபூமி
பரிமாற்று விகிதத்தில் தான் பழக்கமும் பண்பாடும் வளர்ச்சியும் அடங்கியிருக்கின்றது. இன்றைய சூழலில் மனிதர்களின் மனம் எதை பின்பற்றுகின்றது?. நன்பகத்தன்மை நம்மிடையே குறைந்தமைக்கு தனி மனிதனாகிய நாம் ஒவ்வொருவரும் தான் காரணம். மற்றொரு பக்கம் புகழுக்கென்று அழையும் ஒரு கூட்டம். தற்பெறுமை இழவு வீட்டில் மார்ரடிப்பது போல வழக்கமாகிவிட்டது.
    
                  "ஈதல் இசைபட வாழ்தல் அதுஅல்லது
                   ஊதியம் இல்லை உயிர்க்கு"

ஏழைகளுக்கு உதவ வேண்டும் அதனால் புகழ் பெற்று வாழவேண்டும்; அதை தவிரப் பிறப்பின் பயன் வேறொன்றும் இல்லை.

                    "தோன்றின் புகழொடு தோன்றுக அஃதுஇலார்
                     தோன்றலின் தோன்றமை நன்று"

ஒரு செயலில் நுழைந்தால் புகழ் பெற வேண்டும் என்ற எண்ணத்தோடு நுழைய வேண்டும் இல்லை யென்றால், அச்செயலில் நுழையாதிருப்பதே நல்லது.

புகழின் நோக்கம் அச்செயலை விரைந்து முடிக்க உந்துதல் செய்யும், அதே சமயம் புகழின் உச்சி தலை கணத்தை உருவாக்கிவிடாமல் இருந்தால் நல்லது.
00:03 | Author: அன்னைபூமி
கூத்துகலையில் முதல் ஆறு வகை நின்று ஆடுவது. இதில் முதல் மூன்று, அவை பின்வறுவன.

அல்லியம் 
                    இது கண்ணன் யானையின் மருப்பை ஒடித்ததை காட்டும் ஆடல், இந்த ஆடலுக்கு ஆறு உறுப்புகள் உண்டு.


கொடுகொட்டி
                        சிவபெருமான் முப்புரத்தை எரித்து, அது எரியுண்டு எரிவதைக் கண்டு வெற்றிக் களிப்பினால் கைகொட்டி நின்று ஆடிய ஆடல் இது. கொட்டிச் சேதம் என்றும் இதற்குப் பெயர் உண்டு. இந்த ஆடலுக்கு நான்கு உறுப்புகள் உண்டு. இவ் ஆடலில் உட்கு (அச்சம்), வியப்பு, விழைவு, பொழிவு என்னும் குறிப்புகள் உண்டு.


குடைகூத்து
                       இது முருகன் அவுணரை வென்று ஆடிய ஆடல் இக் கூத்திற்கு நான்கு உறுப்புகள் உண்டு. காவடி என்னும் பெயருடன் இக்காலத்தில் ஆடுகிற கூத்து, குடைக் கூத்துப் போலும்.


நன்றி, மீதம் உள்ளவற்றை அடுத்த பதிப்பில் காண்போம்.
00:01 | Author: அன்னைபூமி
நாம் வாழ்வில் எத்தனையோ நபர்களை தினமும் நம் தொழில் முறை கருதியோ பழக்கத்தின் காரணமாக பலரை சந்திக்கின்றோம். இவர்களிடம் நாம் எப்படி நடந்துகொள்வது, அவர்களிடம் இருந்து நமக்கான நடத்தைகளை எப்படி கற்றுக்கொள்வது, ஏன்னென்றால் நாம் பழகும் ஒவ்வொருவரிடம் இருந்தும் அவர்களின் நடத்தைகளை நாம் அறியாமையே நாம் கற்றுக்கொள்கின்றோம். நம்மை போல் தான் அவர்களும் நம்மிடம் இருந்து ஏதோ ஒன்றை கற்றுகொள்கின்றனர். என்வே நாமும் நம் சுற்றத்தரும் செடயல் மற்றும் எண்ணங்களில் வளமைமிக்கவர்களாக இருக்க வேண்டியது அவசியம்.

"நிலத்துஇயல்பால் நீர்திரிந்து அற்றாகும் மாந்தர்க்கு
 இனத்துஇயல்பது ஆகும் அறிவு"

நிலத்தின் தன்மைக்கு ஏற்ப, பெய்த நீரின் தன்மை திரியும் அதுபோல் தாம் சேர்ந்த இனத்திற்குத் தக்கவாரே மனிதர்களுக்கு அறிவு திரியும்.
           
"மனத்தான்ஆம் மாந்தர்க்கு உணரிச்சி இனத்தான்ஆம்
 இன்னான் என்ப்படும் சொல்"

மாந்தர்க்கு பொது உணர்வு மனம் காரணமாக உண்டாகும். இவன் இப்படிப் பட்டவன் என்று சொல்லப்படும் சொல் இனம் காரணமாக உண்டாகும்.

இங்கு வள்ளுவர் இனம் என்று குறிப்பிடுவது நாம் பழகும் மனிதர்களை, அவர் தம் இயல்பை. 
00:05 | Author: அன்னைபூமி
கூத்துக்கலை, தெய்வங்கள் தமது பகைவரான அவுணர்களுடன் போர் செய்து வென்று, வெற்றிக் களிப்பில் ஆடிய ஆடல்கல். இவை, பதினொரு வகைப்படும்
1 அல்லியம்
2 கொடு கொட்டி
3 குடை
4 குடம்
5 பாண்டரங்கம்
6 மேல்
7 துடி
8 கடையம்
9 போடு
10 மரக்கால்
11 பாவை
இவற்றில் முதல் "ஆறு" நின்று ஆடுவது; பின்னுள்ள ஐந்தும் வீழ்ந்து ஆடுவது.இந்த ஆடல்களை ஆடத் தொடங்கும் முன்னர் திருமாலுக்கும் சிவ பெருமானுக்கும் தேம்பாவணி பாடப்படும் என்று சொலப்படுகின்றது.
                                                                               இந்த ஆடல்களை எந்த தெய்வங்கள் எதன் வெற்றிக் களிப்பில் ஆடினார்கள் என்பதை அடுத்த பதிப்பில் காண்போம்.
00:05 | Author: அன்னைபூமி
2010ம் ஆண்டு மகிழிச்சியுடன் கடந்தது.....
2010ம் ஆண்டிற்கு எங்களது நன்றி
ஆன்னைபூமி தொடங்க 2010ம் ஆண்டு துணைநின்றது......
வாழ்த்திய நல்லுள்ளங்களுக்கு எங்கள் நன்றி
நீங்கள்தான் எங்கள் ஆக்கசக்தி........
துற்றியவர்களுக்கும் எங்கள் நன்றி
நீங்களே எங்கள் வலிமை பெருகச் செய்தவர்கள்......
நன்பர்களுக்கு எங்கள் நன்றி
உங்களது அன்பால் எங்கள் இதயம் தாராளமானது....
எதிரிகளுக்கும் எங்கள் நன்றி
அவர்கள்தான் எங்கள் வெற்றிக்கு சான்று........
பார்வையாளர்களுக்கு எங்கள் நன்றி
நீங்களே எங்களை ஊக்கப்படுத்தியவர்கள்......

"நல்லுள்ளங்கள் பெருகவும் .... நல்ல சிந்தனை மலரவும்.....
தமிழினமும் தமிழும் வின்னை தாண்டி புகழ் சேர்க்கவும்......
இந்த புத்தாண்டும் துணை நிற்கட்டும்........"

   "அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்"
Category: | Leave a comment