18:21 | Author: அன்னைபூமி

நிமிசமாய் வேர்த்துக் கொட்டியது
காந்தி சிரித்த ஐம்பது ரூபாய்
எங்கேயோ தொலைந்து விட்டது
கையில் இருந்த தொகையில்
அது ஒன்றும் பெரிதில்லை
ஆனாலும் உழைப்பின் அருமை
கவனமின்மையை கண்டித்தது
கடைவீதி மூலையில் எண்ணினால்
கணக்கு குறைந்து கவலை வந்தது
துணிக்கடையிலா? நகைக்கடையிலா?
மறந்ததோ... மறைந்ததோ....

கண்மூடி திறந்தால் எதிரே....
நோட்டுகளும் சில்லரையுமாய்
கைகளை நீட்டி "அண்ணா" என்றபடி
மொத்த மானிட இனத்தின்
நம்பிக்கை வில(ள)க்கமாய் ....
பூ வாங்கியது இவளிடமோ...?
நன்றி தந்து வாங்கிய பணத்தை
பையில் வைத்த நொடி....

நேர்மையின் இருப்பிடம் காரணம்
வறுமையா... பள்ளிச் சிறுமி என்பதாலா
இதய ஓரத்தில் அநியாயமாய்
தராசு தாழ்ந்து கேட்டது
ஐம்பதிற்கு என்பது சிறிய தொகையோ?
அடுத்த நொடியில்........
தாழ்ந்த தட்டில் கனத்த இதயம்
சிந்தனை தாழேல் என்றது
Category: |
You can follow any responses to this entry through the RSS 2.0 feed. You can leave a response, or trackback from your own site.

0 comments: